கொரோனாவை வெல்ல இதைச் செய்யுங்கள் - தமிழக அரசுக்கு ராமதாஸ் பரிந்துரை

politics
By Nandhini Apr 20, 2021 08:08 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை அதிவேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, தமிழகத்தில் இதுவரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து, இன்றிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், பூக்காக்கள், சுற்றுலா தளங்கள் உள்பட பொதுமக்கள் அதிகமாக கூடும் பொழுதுபோக்கு இடங்களை அரசு மூட உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு போதுமானது அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக, டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு போதுமானதல்ல. மக்களை பாதிக்காத வகையில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மிகவும் முக்கியமானதான டாஸ்மாக் மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்தும், 200 வகையான நோய் பாதிப்புகளில் இருந்தும் மக்களைக் காப்பாற்ற முடியும். இவை அனைத்தையும் விட முக்கியமானது மக்களே... விழிப்புணர்வுடன் இருங்கள். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வராதீர்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். முகக்கவசம் அணியுங்கள். தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.