கொரோனா வைரஸ் மட்டும் என் கையில் கிடைத்தால் அதை பட்னாவிஸ் வாய்க்குள் திணிப்பேன்- சிவசேனா எம்.எல்.ஏ
கொரோனா வைரஸ் மட்டும் என் கையில் கிடைத்திருந்தால் அதனை மாகராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவர் தேவந்திர பட்னாவிஸ் வாய்க்குள் திணித்துவிட்டிருப்பேன் என சிவ சேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் சர்ச்சையான கருத்தை கூறியிருக்கிறார்.
கொரோனா வைரசை குணப்படுத்தும் ரெம்டெசிவர் மருந்தை தேவந்திர பட்னாவிஸ் பதுக்கியிருப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தற்போது, மத்திய அரசு ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் ரெம்டெசிவர் மருந்தை ஒரு நிறுவனம் ஏற்றுமதி செய்யப்போவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற போலீசார் மருந்தை ஏற்றுமதி செய்ய இருந்த நிறுவன உரிமையாளரை கைது செய்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மருந்து நிறுவன உரிமையாளரை விடுதலை செய்ய கோரி பாஜக மூத்த தலைவரும், மாகராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவர் தேவந்திர பட்னாவிஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதன்காரணமாக ரெம்டெசிவர் மருந்தை பதுக்கியதாக தேவந்திர பட்னாவிஸ் மீது சிவ சேனா கட்சியினர் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
சிவசேனாவின் புல்தானா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தேவந்திர பட்னாவிஸ், சிவ சேனா அரசுடன் இணைந்து கொரோனா பாதுகாப்பு விஷயங்களை மேற்கொள்ளாமல் ஆளும் அரசியல் கட்சியைக் கிண்டலும், கேலியும் செய்துகொண்டிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநில மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகிறார்கள். மாநில பாஜக அலுலவகத்தில் இருந்து குஜராத்திற்கு 50,000 ரெம்டெசிவர் மருந்துகள் இலவசமாக அனுப்பப்பட்டிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம். இப்போது என் கண்ணெதிரே கொரோனா வைரஸ் மட்டும் கிடைத்தால், நான் அதை பட்னாவிஸ் வாய்க்குள் திணித்துவிடுவேன் என்றார்.