காவலர்களுக்கு இலவச பஸ் பாஸ்: போக்குவரத்து துறை கடிதம்
காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விவரங்களை கேட்டு டிஜிபிக்கு போக்குவரத்துத் துறை கடிதம் எழுதியுள்ளது.
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் தமிழகக் காவலர்கள், தங்களது காவலர் அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டு இலவசமாக பயணிப்பார்கள். பணி நிமித்தமாக அவர்கள் செல்லாவிட்டாலும் இதுபோன்ற வழக்கம்தான் உள்ளது. ஆனால், பணி நிமித்தமாக செல்லும்போது கூட வாரண்ட்டுகள் இருந்தால் மட்டும்தான் அவர்களால் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள முடியும்.
இதுதொடர்பாக, காவல்துறைக்கு அனுப்பப்படும் மொத்த ரசீதுகள் மூலம் காவல்துறையில் இருந்து போக்குவரத்துத்துறை பணம் வசூலித்துக் கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனிடையே, அரசுப் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும் காவலர்கள் முறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும். மாநில மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல், உத்தரவை அனைத்து போலீஸாரும் கடைப்பிடிப்பதை அந்தந்தத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு அண்மையில் உத்தரவு ஒன்றை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பினார்.
மனித உரிமைகள் ஆணையம் அளித்த பரிந்துரையின் பேரில் அந்த உத்தரவை அவர் பிறப்பித்திருந்தார். காவலர்கள் மத்தியில் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனிடையே, நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், காவலர்களுக்குப் பல்வேறு சலுகைகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் ஒருபகுதியாக, இரண்டாம்நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரை அரசு பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாம். அதற்கு காவலர் அடையாள அட்டை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், காவலர்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அமல்படுத்துவதற்கு, பேருந்தில் பயணம் செய்யும் காவலர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை அனுப்புமாறு கேட்டு டிஜிபிக்கு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் காவலர்கள் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான கட்டண செலவைக் கணக்கிடுவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட இரண்டாம்நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான காவல் துறையினரின் விவரங்களை பட்டியலிட்டு அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி சென்னையில் குளிர்சாதன பேருந்தை தவிர மற்ற பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரையில், விலையில்லா பயணச்சீட்டு மூலம் பெண்கள் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காவலர்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது