2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்த போலீஸ்காரரின் மனைவி
கேரளாவில் 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு போலீஸ்காரரின் மனைவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ரெனீஷ் என்பவர் ஆலப்புழா காவல் நிலையத்தில் போலீஸ்காரராக செயல்பட்டு வருகிறார். இவர் மனைவி நஜீலா (27), மகன் திப்பு சுல்தான் (5). மகள் மலாலா (1 1/2) ஆகியோருடன் ஆலப்புழா நகரில் ஏ.ஆர். கேம்ஸ் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இதனிடையே நேற்று அதிகாலை ரெனீஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்ட நிலையில் மதியம் 12 மணியளவில் தனது மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால் எந்தவிதமான பதிலும் வராததால் மீண்டும் மாலை நேரத்தில் போன் செய்துள்ளார். அப்போதும் எந்த வித எதிர் பதிலும் மனைவியிடம் இருந்து கிடைக்கவில்லை.
உடனடியாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களை அழைத்து வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் சென்று பார்த்து விட்டு வீடு பூட்டி உள்ளதாகவும், கூப்பிட்டு பார்த்தாலும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் பதற்றமடைந்த ரெனீஷ் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்த போது கதவு உள்பக்கம் தாழ் போடப்பட்டு இருப்பது தெரியவந்தது. சந்தேகம் அடைந்த அவர் ஆலப்புழா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது நஜீலா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் காணப்பட்டார்.
அதேசமயம் ஒரு துணியை பயன்படுத்தி திப்பு சுல்தானின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும், மகளை பக்கெட் தண்ணீரில் முக்கி கொன்றிருப்பதும் தெரிய வந்தது. 3 பேரின் உடலையும் மீட்ட போலீசார் ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை செய்தபோது கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடைபெறுவது வழக்கம் என தெரிவித்துள்ளனர். எனினும் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.