அம்மா, போறேன் மா; கூடவே இருப்பேன்.. கடிதம் எழுதி வைத்து காவலர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்!
உருக்கமான கடிதம் எழுதி வைத்து காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவலர் தற்கொலை
மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகேயுள்ள ஊஞ்சக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அன்புராஜ் (22). சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை சிறப்புக் காவல் பிரிவில் 2வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 30ம் தேதி ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அன்புராஜ் நேற்று இரவு திடீரென அரளி விதையை அரைத்துக் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அன்புராஜை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உருக்கமான கடிதம்
இந்நிலையில் அன்புராஜ் வீட்டில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் "அம்மா, போகிறேன் மா. நான் இத்தனை நாள் வாழ்ந்ததே உனக்காக தான். எனக்கு என்ன ஆச்சுனு தெரியல.
எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இத எப்படியும் யாராவது உங்கிட்ட படிச்சு காட்டுவாங்க. நான் யார் கிட்டையும் சொல்லாம போய்டலாம் என்று தான் நினைச்சேன். அப்புறம் எல்லாம் தப்பா பேச ஆரம்பிச்சுடுவாங்க. என் மனமறிந்து யாருக்கும் கெட்டது செஞ்சதுல்ல. என் தலைக்குள்ள ஏதோ ஓடிட்டு இருக்கு. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. வெளியே எங்கேயும் போகமாட்டேன் மா.
கூடவே தான் இருப்பேன். அதுக்காகத்தான் வீட்டுக்கு வந்தேன். 'ஒருவன் நல்லவன் என்பதற்கு அர்த்தம் அவன் இறந்த பின் அவனுக்காக சிந்தும் கண்ணீர் துளிகளால் மட்டுமே கண்டறியப்படுகிறது”. என்று அன்புராஜ் உருக்கமாக எழுதியிருந்தார்.
இதனால் அவருக்கு குடும்ப பிரச்சனை, பணிச்சுமை அல்லது மன உளைச்சல் ஏதாவது இருந்ததா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.