வாகன ஓட்டுநரை ஆபாசமாக பேசிய போலீஸ்காரர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
சோதனை சாவடியில் மிளகாய் ஏற்றிச் சென்ற வாகன ஓட்டுநரை ஆபாச வார்த்தைகளால் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசும் காவல்துறை அதிகாரிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கல்வார்பட்டி சோதனை சாவடி ஒன்று உள்ளது. இந்த சோதனைச் சாவடியில் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் ஆவணங்களை சரிபார்த்து சோதனை செய்து வருகின்றனர்.
அந்த சோதனை சாவடி வழியாக மிளகாய் ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்திய போலீசார் ஆவணங்களை சரிபார்த்துள்ளனர்.
அப்போது ஆவணங்கள் சரியாக இருந்தும் போலீசார் வாகன ஓட்டுநர் யூனிபார்ம் சரியாக அணியவில்லை எனக் கூறி பணம் கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஓட்டுநர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது காவல் துறை அதிகாரி ஒருவர் அந்த வாகன ஓட்டுநரை ஆபாசமாக பேசினார்.
இதையடுத்து வாகன ஓட்டுநர் மரியாதையாக பேசுங்கள் என கூறினார்.இதையடுத்து நீ போ பாத்துக்கலாம் என அந்த காவல் துறை அதிகாரி கூறவே அந்த வாகன ஓட்டுநர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களை போன்ற காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.