மது குடிக்காதவரிடம் அபராதம் வசூலிக்க முயன்ற போலீசார் - வாக்குவாதம் செய்த வாகன ஓட்டி
மது பழக்கமே இல்லாத ஒருவரிடம் மது குடித்ததாக கூறி போலீசார் அபராதம் வசூலிக்க முயன்ற போது வாகன ஓட்டி வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலானதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாகன சோதனையில் போலீசார்
விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கவும் போலீசார் வாகன சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த சோதனைகளில் போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி அந்தந்த பகுதிகளில் போலீசாரும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரபரப்பாக காணப்படும் சென்னையில் போக்குவரத்து போலீசாரின் கெடுபிடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுப்பழக்கம் இல்லாதவருக்கு 10 ஆயிரம் அபராதம்
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்தவர் தீபக், நேற்று முன்தினம் இரவு சென்னை டிடிகே சாலை அருகே தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர் வந்த காலை நிறுத்தி மது அருந்தியுள்ளாரா என்று பிரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
அந்த கருவி 45 சதவீதம் மது அருந்தியுள்ளதாக காண்பித்துள்ளது. இதையடுத்து தீபக்குக்கு மது அருந்தி வாகனம் ஓட்டியதாக கூறி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான ரசீதை கொடுத்தனர்.
இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அவர், ரசீதை வாங்க மறுத்து, தனக்கு மது குடிக்கும் பழக்கமே கிடையாது.
நடுரோட்டில் வாக்குவாதம்
நீங்கள் பரிசோதித்த கருவி சரியில்லை. என்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்த பரிசோதனை செய்யுங்கள் நான் வரத் தயார்.
நீங்கள் வைத்திருப்பது டப்பா மெஷின். அதனால் தான் நான் மது அருந்தி உள்ளதாக மிஷின் பொய்யாக காட்டுகிறது என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.
இதையடுத்து போலீசார் அவருடைய வாதத்தை ஏற்காமல் வரம்பு மீறி நடந்து கொண்டனர். பதிலுக்கு நீங்கள் பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டினார்.
பின்னர் அரை மணி நேரம் கழித்து புதிய பிரீத் அனலைசர் கருவியுடன் வந்த சில போலீசார் தீபக்கிடம் அடுத்தடுத்து இரண்டு முறை சுவாச சோதனை செய்தனர்.
அதிர் தீபக் மருந்தவில்லை என காண்பித்து, அதன் பிறகே தீபக்கை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். மது அருந்தும் பழக்கமே இல்லாத ஒருவரிடம் மது அருந்தியதாக கூறி போலீசார் வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக்கு உத்தரவிட்ட போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர்
இச்சம்பவம் பற்றி பேசிய போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் பேசுகையில் சென்னையில் 245 பிரீத் அனலைசர் கருவி உள்ளது.
இதில் சம்மந்தப்பட்ட கருவி மூலம் நேற்று முன்தினம் மட்டும் 70 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவர் தீபக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதுபோன்று நிகழ்ந்திருக்கலாம் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.
போலீசார் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.