அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...கோவில் பிரச்சனையை விசாரிக்க சென்ற எஸ்ஐக்கு அரிவாள் வெட்டு
ராமநாதபுரத்தில் கோவில் பிரச்சனையை விசாரிக்க சென்ற எஸ்ஐக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே அனிச்சக்குடி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் வழிபடுவதில் இரு தரப்பினரிடையே இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக பிரச்சனை இருந்து வந்தது. இதனிடையே நேற்று காளியம்மன் கோவிலுக்கு ஆர்.எஸ்.மங்கலம் அதிமுக ஒன்றிய செயலாளர் நந்திவர்மன் வழிபடச் சென்றபோது ஆலயத்தில் துரைராஜ் என்பவர் பூஜை செய்து திருநீரை எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை மற்றொரு தரப்பை சேர்ந்த மலைராஜ் என்பவர் துரைராஜிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விசாரிக்க சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் சென்றுள்ளார்.
இதையடுத்து விசாரித்துக் கொண்டிருந்தபோது சார்பு ஆய்வாளருக்கும், மலைராஜூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதில் அவர் திடீரென அரிவாளால் சார்பு ஆய்வாளர் தமிழ்செல்வன் தலையில் வெட்டினார், இதில் அவருக்கு பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சார்பு ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய மலைராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் குடிபோதையில் இருந்த மலைராஜ் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.