வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்...பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு!
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை
கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைத்தளத்தில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது.
இதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் வதந்தி பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று தெரிவித்து இருந்தார்.மேலும் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
இதை தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரித்தார்.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்பு பிரச்சாரம் தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது.
இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வடமாநில மக்களை ஏளானமாக பேசுவதும், அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்துவதும் திமுக கலாச்சாரத்தின் விளைவு தான் இன்றைய நிலைக்கு காரணம் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிக்கையை தொடர்ந்து அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கலகம் செய்யத்துாண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் பீகாரின் பாஜக ட்விட்டர் பக்கத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கபடுவதாக வீடியோக்கள் வெளியிட்ட நிலையில் தமிழக போலீசார் அந்த ட்விட்டர் கணக்கை கையாளும் நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.