அழிந்து வரும் தாய்ப்பாசம் - மூதாட்டிக்கு மண்ணை உணவாக்கிய மகன்கள்
தஞ்சாவூரில் இரண்டு மகன்களால் அடைத்து வைக்கப்பட்ட மூதாட்டி மண்ணை சாப்பிட்டு உயிர் வாழ்ந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகேயுள்ள காவிரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எலும்பும் தோலுமாக ஆடையின்றி ஒரு மூதாட்டி மண்ணை உண்பது போல் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து 1098 உதவி மையத்திற்கு சமூக ஆர்வலர்கள் புகார் அளித்ததையடுத்து அங்கு வந்த சமூக நலத்துறையினர் அப்பகுதியில் விசாரித்தனர்.
இதில் அந்த மூதாட்டி பெயர் ஞானஜோதி என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்தது. மேலும் அவருக்கு திருமணமாகி அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர் என்றும், மூத்தமகன் சென்னையில் காவல் ஆய்வாளராகவும், இளைய மகன் அரசு தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
கணவரும், தனது மகளும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ஞானஜோதியை இரண்டு மகன்களும் கவனிக்காமல் கைவிட்டுள்ளனர். சொத்துப் பிரச்சனையை காரணமாக தனியாக வசிக்கும் மகன்கள் மனநலம் பாதிக்கப்பட்ட தாயை வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர். இதுகுறித்து அருகில் இருப்பவர்கள் கூறுகையில் கடந்த 10 வருடமாக மூதாட்டியின் நிலை இப்படி தான் உள்ளது என தெரிவித்துள்ளனர். வாரத்திற்கு ஒரு முறை அவரது மகன்கள் வந்து பிஸ்கட் வாங்கி கேட் வழியாக தூக்கி வீசி விட்டு போவார்கள். இது குறித்து கேட்டால் எங்களிடம் சண்டைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் அவ்வபோது இப்பகுதி மக்கள் உணவு வழங்கி வந்துள்ளனர். தண்ணீர், உணவு என எதுவும் இல்லாமல் மூதாட்டி மண்ணை உண்டும் வந்துள்ளார் . இந்த காட்சிள் இணையத்தில் பரவியதையடுத்து உடனடியாக அந்த மூதாட்டியை மீட்டு முதலுதவி வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் அவரது இரண்டு மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் வந்த சமூக நலத்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து மூதாட்டியை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.