நளினி, முருகனுக்கு பாதுகாப்பு வழங்குவது கடினம் - வேலூர் காவல்துறை
நளினி, முருகனுக்கு பரோல் வழங்க சிறை துறை மாவட்ட காவல் துறையிடம் பாதுகாப்பு குறித்து அறிக்கை கேட்டிருந்த நிலையில். பாதுகாப்பு வழங்க அனுமதி மறுப்பு.
முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 29- ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி 30 நாள் பரோல் கேட்டு தமிழக முதல்வருக்கும், உள்துறை செயலருக்கும் சிறை துறை மூலம் கடந்த 26.05.2021-ம் தேதி கடிதம் அனுப்பினார்.
அதில் சென்னையில் உள்ள தனது தாய் பத்மா வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் அவரை கவனித்துக் கொள்ளவும் இலங்கையில் உள்ள தனது மாமனார் வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆனதால் அவருக்கு சடங்குகள் செய்யவும் தனக்கும், மத்திய சிறையில் உள்ள தனது கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என நளினி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நளினி - முருகனுக்கு பரோல் வழங்கப்பட்டால் அவர்கள் எங்கு தங்குவார்கள், அவர்களுக்காக செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன என்ன என்பது குறித்து வேலூர் மாவட்ட காவல் துறையிடம் அறிக்கை கேட்டிருந்தது சிறை துறை.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதாகவும், காவல் துறையினர் பெரும்பாலானோர் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் முழு ஊரடங்கு கண்காணிப்பு பணியில் இருப்பதால் நளினி - முருகனுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளதால் தற்போதைக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என மறுத்துள்ளது மாவட்ட காவல் துறை.
ஏற்கனவே இதே வழக்கில் சிறையில் இருந்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.