விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளி கைது- திடுக்கிடும் தகவல்கள்
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 30 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளாத்திகுளம் அருகே மார்ச் 10ம் தேதி காணாமல் போன 12ம் வகுப்பு மாணவி, அடுத்த நாள் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் விசாரணையை தொடர்ந்தனர்.
கடந்த 9 நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், 5 பேரின் டிஎன்ஏ எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குற்றம் நடந்த காட்டுப்பகுதியில் இருசக்கர வாகனம் இருந்தது தெரியவந்தது.
வாகனத்தின் எண்ணை கொண்டு விசாரித்ததில் அது திருடப்பட்டதும், அதுதொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
அந்த வழக்கு தொடர்பாக விசாரணையை தொடர்ந்ததில், மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, சந்தேகிக்கப்பட்ட நபரின் கைகளில் நகக்கீறல் இருந்துள்ளது, மாணவியின் உடலில் இருந்து நகப்பகுதி சதையின் டிஎன்ஏ-வுடன் அவர் டிஎன்ஏ ஒத்துப்போனதால் மாவீரன் (எ) தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார், அவரது செல்போன் சிக்னல் சம்பவ இடத்தில் இருந்ததும் தெரியவந்தது.
இவரிடம் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 2020ம் ஆண்டு மூதாட்டி ஒருவரை துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு வந்தவர் என்பது கூடுதல் தகவல்.
