கோவை கார் வெடிப்பு; காவல்துறை துணிச்சலாக செயலாற்றி உள்ளது - அண்ணாமலை
கோவை கார் வெடிப்பு தங்கள் உயிரை பணயம் வைத்து துணிச்சலாக செயல்பட்டு காக்கும் கடவுளாக காவல்துறை நண்பர்கள் செயல்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை நேரில் பார்வையிட்டார்
கோவையில் கடந்த 23 ஆம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தை அடுத்து 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு இடத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசை தொந்தரவு செய்வது பாஜகவின் நோக்கம் அல்ல. மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, இன்னும் சிறப்பாக கடமையை செய்வதற்கு தான்.
கூடுதல் தாக்குதல் நடக்காமல் போலீஸ் நடவடிக்கை எடுத்தது. முன்கூட்டியே மத்திய உளவுத்துறை எச்சரித்தும், தவறுகள் நடந்துள்ளது.
காவல்துறையை பாராட்டிய அண்ணாமலை
தவறுகளை திருத்தி கொள்ள வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது. கோவை மாநகர காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
கோவையில் வேறு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து துணிச்சலாக செயல்பட்டு காக்கும் கடவுளாக காவல்துறை நண்பர்கள் செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி.
கோவை சம்பவத்தில் எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை. பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல. எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது.
குற்றவாளிகளை ஒரு மதத்தை சேர்ந்தவர் என கூறவில்லை. ஐஎஸ் கொள்கை தவறு என இஸ்லாமிய குருமார்களே கூறுகின்றனர்.
பாஜகவின் கருத்து யாருக்கும் எதிரானது அல்ல என்றார்.
உக்கடத்தில் கார் வெடித்த இடத்தில் கிடந்த பால்ரஸ்குண்டு, ஆணிகளை அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.