நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து தான் போட்டி - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்றும், பாமக தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது . இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் , ஏ.கே.மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தை ஆட்சி செய்யவே பாமக கட்சி தொடங்கப்பட்டது என்றும், யாரோ ஆட்சியை பிடிக்க நாம் ஏன் சேவை செய்ய வேண்டும். அடுத்து நாம் தான் ஆட்சியை பிடிக்க போகிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த மாற்றம் உள்ளாட்சியில் தொடங்கட்டும் எனவும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்தே போட்டியிடும் என்றும் அவர் கூறினார். பொதுவாக சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது, அந்த வகையில் அடுத்த தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும்.
தொடர்ந்து பேசிய அன்புமணி பொது பட்டியலில் உள்ள கல்வி மாநில பட்டியலில் வர வேண்டும். அப்போது தான் இங்கு நீட் தேர்வு ரத்தாகும். சட்டப்பேரவையில் தற்போது நிறைவேற்றியுள்ள நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ஜனாதிபதி ஏற்பதும் சந்தேகமே" என்று தெரிவித்துள்ளார்.