உடைந்தது அதிமுக கூட்டணி - உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக பாமக அறிவித்துள்ளது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பகுதிகளில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாமக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும், தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.
மேலும் கட்சியின் வளர்ச்சி கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.