மது விற்பனையில் ஈடுபடும் தமிழக அரசு.. பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் -அண்ணாமலை!
மது விற்பனையில் ஈடுபடும் தமிழக அரசு பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு
தென்காசியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, "தமிழ் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்க்க சேர்க்க வேண்டுமென பிரதமர் நினைக்கிறார். இந்தியாவில் நவோதயா பள்ளி இல்லாத மாநிலம் தமிழ்நாடு.
நவோதயா பள்ளியை "காமராஜர் பள்ளி" என மத்திய அரசு கொண்டு வர தயார்.ஏழை குழந்தைக்கு ஒரே ஆயுதம் கல்வி மட்டும் தான். அதனால் தான் தமிழக பா.ஜ.க. தொடங்கி வைத்துள்ள கையெழுத்து இயக்கம் 12 லட்சத்தை தாண்டி செல்கிறது. தீய சக்திகளின் கூடாரமாக தி.மு.க. மாறி உள்ளது.
தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. பெண்கள் வீடு திரும்பும்வரை பதைபதைப்புடன் இருக்கின்றனர். நாட்டை காப்பாற்ற வேண்டும். வீட்டை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது.
பட்ஜெட்
தவறாக சொத்து சேர்ப்போருக்கு இப்போது மரியாதை அளிக்கும் நிலை உள்ளது. ஊழல் கறை படியாத இடமே இல்லை என்ற நிலையை திமுக ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தின் கடன் ரூ.9.5 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.
மது விற்பனை இல்லாத குஜராத் நிதி பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. ஆனால் மது விற்பனையில் ஈடுபடும் தமிழக அரசு பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. நாளைய குழந்தைகளின் தலையில் கடன்சுமை இறக்கப்படுகிறது.