ஆரோக்கியமான முதுமைக்கு யோகா அவசியம்: மோடி வலியுறுத்தல்
யோகாவை என்றோ ஓரிருநாள் செய்யும் விஷயம் என சுருக்கிவிடாமல், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக அனைவருமே மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, கடந்த 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் வைத்திருந்தார் பிரதமர் மோடி.

அதனை ஏற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அந்தவகையில், இன்று 12வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கொல்கத்தாவின் ரெட் ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது உரையாற்றிய அவர், இந்த ஆண்டின் யோகா தினக் கருப்பொருள் “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்பதைக் குறிப்பிட்டு, யோகா என்பது வயதானவர்களுக்கானது மட்டுமல்ல; அனைத்து வயதினரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய பயிற்சி என வலியுறுத்தினார்.

யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல என்றும், மனஅழுத்தமற்ற வாழ்க்கை, உடல் நலம் மற்றும் வாழ்வியல் நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ச்சியான யோகா பயிற்சி உடலையும் மனதையும் நீண்ட காலம் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என்றும் கூறினார்.
மேலும், யோகாவை ஓரிரு நாட்கள் செய்யும் செயலாக கருதாமல், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.