காற்று எரிசக்தியில் உலகளவில் 4 ஆம் இடம் பிடித்த இந்தியா - மோடி பெருமிதம்
இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் காற்று எரிசக்தி ஒரு புதிய வரலாற்றை எழுதி வருகிறது. இந்தியா சமீபத்தில் காற்று எரிசக்தி உற்பத்தியில் 56 கிகாவாட் (56 GW) என்ற மிகப்பெரிய மைல்கல்லைக் கடந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் எனப்படும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலமாக ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமைகளில் பிரதமர் மோடி வானொலி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில் இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய போதே அதனை தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் காற்று எரிசக்தி ஒரு புதிய வரலாற்றை எழுதி வருகிறது.
இந்தியா சமீபத்தில் காற்று எரிசக்தி உற்பத்தியில் 56 கிகாவாட் (56 GW) என்ற மிகப்பெரிய மைல்கல்லைக் கடந்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் காற்று எரிசக்தி உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பாக குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இத்துறையில் சிறந்து விளங்குகின்றன. ஒரு காலத்தில் தரிசு நிலங்களாகக் கருதப்பட்ட கட்ச், பதான் மற்றும் பனஸ்காண்டா போன்ற பகுதிகள் இன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மையங்களாக மாறி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.
அறிவியலை வளர்ச்சியுடன் இணைப்பதே இந்தியாவின் நோக்கம். சிவில் அணுசக்தி திட்டத்தில் இந்தியாவின் முன்னேற்றம் கண்டுள்ளது.
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள 'ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' அதன் செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளது ஒரு வரலாற்றுச் சாதனை. இது முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது இந்திய விஞ்ஞானிகளின் திறமைக்குச் சான்றாகும் என தெரிவித்துள்ளார்.