”செந்தமிழ் நாடெனும் போதினிலே..” - தமிழ் மொழியையும் தமிழர்களையும் போற்றி புகழ்ந்த பிரதமர் மோடி!
பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தடைந்தார், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அவர் தனது பயணத்தின் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சென்னை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசுவாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதன் பின்னர் சாலை மார்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சென்ற மோடியை தமிழக முதலமைச்சர் சிலப்பதிகாரம் நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை வழங்கி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், பிரதமரின் தமிழக பயணத்தின் போது நாட்டிற்கு அர்ப்பணித்த திட்டங்கள்:
75 கி.மீ தொலை தூரமுள்ள ரூ.500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை - தேனி இடையிலான ரயில் தடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
மேலும், சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 30 கி.மீ தொலைவுக்கு ரூ.590 கோடி மதிப்பில் 3-வது ரயில்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
ரூ.850 கோடி மதிப்பிலான 115 கிமீ நீளமுள்ள எண்ணூர்-செங்கல்பட்டு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டம், ரூ.910 கோடி மதிப்பிலான மற்றும் 271 கிமீ நீளமுள்ள திருவள்ளூர்- பெங்களூரு பிரிவு இயற்கை எரிவாயு குழாய் திட்டம்,
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகள்.
262 கிலோமீட்டர் தொலைவிலான பெங்களூரு சென்னை விரைவுச்சாலை ரூ.14,870 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ளது.இந்தச்சாலை பெங்களூருக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரத்தை 2 முதல் 3 மணி நேரமாக குறைக்கும்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே , இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே..’ என்ற பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.
பிரதமர் மோடி, ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தலைசிறந்தவர்களாக உள்ளனர், தமிழ் மொழி நிலையானது.. தமிழ் கலாசாரம் உலகளாவியது என தெரிவித்தார்.
மேலும், சென்னை முதல் கனடா வரை...மதுரை முதல் மலேசியா வரை... நாமக்கல் முதல் நியூயார்க் வரை...சேலம் முதல் தென் ஆப்பிரிக்கா வரை... தமிழ் பரவியுள்ளது என் குறிப்பிட்டார்.
ஃப்ரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைபப்ட விழாவில் தமிழ் பாரம்பரிய ஆடையில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் சிவப்பு கம்பளத்தில் நடை போட்டது பெருமைக்குரியது எனவும் பிரதமர் தனது உரையில் தெரிவித்தார்.