சனாதனத்தை தவறாக பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
சனாதனத்தை தவறாக பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனாதன சர்ச்சை
தேசிய அரசியலில் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் விவகாரம் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு. தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் தரப்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் உதயநிதி பேசியது தற்போது தேசிய அரசியலில் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உதயநிதிக்கு இந்துத்துவ தொடர்புகளுடைய வழக்கறிஞர்கள் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துளள்னர். மேலும், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி, மேலும் உதயநிதியின் தலைக்கு 10 கோடி விலை வைத்துள்ளார்.
மேலும் சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி
இந்நிலையியல் சனாதனத்தை தவறாக பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி 'எந்த மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா-பாரத் பெயர் சர்ச்சை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்டவர்களே பதில் அளிக்க வேண்டும் எனவும் மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.