BBC ஆவணப்படத்தை திரையிட்ட மாணவ்ர்கள் மீது கல் வீச்சு : பதட்டத்தில் டெல்லி..நடந்தது என்ன?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து இங்கிலாந்து ஊடகமான பிபிசி எடுத்துள்ள ஆவணப்படம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்துக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக அந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டிருந்தது இந்த படத்தை தடை செய்த்து மத்திய அரசு
குஜராத் கலவரம்
பிரதமர் மோடி முதலமைச்சராக குஜராத் மாநிலத்தை வழிநடத்தியக் காலத்தில் குஜராத் கலவரங்கள் நடைபெற்றன. 2002 பிப்ரவரி 27ம் தேதி கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது. பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்ற இந்த கலவரத்தினால் 790 முஸ்லிம்கள், 254 இந்துக்கள் உயிர் பறிபோனது.

மேலும் 223 காணாமல் போயினர். 2500 பேர் வரை படுகாயமடைந்தனர் என 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த மோசமான விளைவுகளை ஏற்படுத்திய கலவரத்தில் பிரதமர் மோடிக்கு பங்கு உள்ளது என இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது
பிபிசி வீடியோ நீக்கம்
இந்த ஆவணப்படத்தை பிபிசி வெளியிட முதல் பாகம் நீக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில மாணவ அமைப்பினர் இந்த ஆவணப்படத்தைத் திரையிட உள்ளதாக அறிவித்தனர். இந்த ஆவணப்படத்தைத் திரையிட வேண்டாம் என்றும் இதனால் வளாகத்தில் அமைதியற்ற சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆவணப்படத்தைத் திரையிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.

ஆனாலும் மாணவ அமைப்பினர் இந்த பிபிசி ஆவணப்படத்தை ஜேஎன்யுவில் திட்டமிட்டபடி திரையிட முடிவு செய்தனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த பிபிசி ஆவணப்படத்தை ஜேஎன்யு மாணவர்கள் திரையிடத் திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு திடீரென மின்சாரம் தடைப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி ஆவணப்படத்தை ஜேஎன்யு மாணவர்கள் இரவு 9 மணிக்குத் திரையிடத் திட்டமிட்டனர்.
பதட்ட நிலையில் டெல்லி
இந்த சூழலில் திரையிடலுக்குச் சற்று நேரம் முன்பு அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்குக் குழப்பமான ஒரு சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் இருளிலும் தங்கள் மொபைலில் இந்த ஆவணப்படத்தைப் பார்த்துள்ளனர். சிலர் தங்கள் லேப்டாப்பிலும் இந்த ஆவணப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்குக் கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களை நோக்கி கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது
இது குறித்து மற்றொரு மாணவர் அமைப்பான ஏவிபி கூறுகையில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் 'இந்தியாவுக்கு எதிரானது' என்றும் காலனித்துவ மனநிலையில் இருந்து வெளிவந்தது என்றும் மாணவர் அமைப்பு கூறியது
தற்போது இந்த தகவல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.