மணிப்பூர் மாநிலத்தை விட இஸ்ரேல் மீது தான் பிரதமர் மோடிக்கு அதிக அக்கறை உள்ளது - ராகுல் காந்தி
மணிப்பூர் மாநிலத்தை விட இஸ்ரேல் மீது தான் பிரதமர் மோடிக்கு அதிக அக்கறை இருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி விமர்சனம்
அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தை ராகுல் காந்தி எம்.பி இன்று நடைபயணத்தை தொடங்கினர்.
சன்மாரி சந்திப்பில் இருந்து ட்ரஷரி சதுக்கம் வரையிலான 2 கி.மீ துாரம் பாத யாத்திரையை தொடங்கினார். அப்போது அய்ஸ்வாலில் பேசிய ராகுல் காந்தி,
"இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதில் அக்கறை காட்டும் பிரதமர் மோடியும், மத்திய அரசும் மணிப்பூரில் நடப்பது குறித்து அக்கறை காட்டாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
பிரதமர் காரணத்தை கண்டுபிடிக்கவில்லை
மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டனர்; பெண்கள் துன்புறுத்தப்பட்டனர்; குழந்தைகளும் கொல்லப்பட்டனர். ஆனாலும் பிரதமர் அங்கு செல்வதற்கு இன்னும் முக்கியமான காரணத்தை கண்டுபிடிக்கவில்லை.
மணிப்பூரில் மோதல் தொடங்கியதில் இருந்து பிரதமர் இன்னும் அங்கு செல்லவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. மணிப்பூர் மோதல் என்பது பிரச்சினையின் அறிகுறி மட்டுமே. மணிப்பூரில் நடந்தது இந்தியா என்ற சிந்தனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலே" என்று ராகுல் காந்தி கூறினார்.