பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி: பிரச்சார உத்திகள் குறித்து ஆலோசனை
பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற பாஜக கூட்டத்தில், ஐந்து மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்ளும் வியூகம் குறித்து மற்றும் பிரச்சார உத்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் திகதிகளை அறிவித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என பரபரப்பாக இயங்கிவரும் நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமை அலுவலகத்தில் இன்று பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டம் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன்போது, ஐந்து மாநிலத் தேர்தல்களை எதிர்க்கொள்வதற்கான வியூகம் சம்பந்மாக விடயங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள, அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரி தேர்தல் குறித்து விசேடமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வரும் 9ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கும் அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 1, 3 மற்றும் 6ஆம் திகதிகளில் அடுத்தடுத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ ஷர்மா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என பாஜக தீவிரமாக பணியாற்றிவரும் அதே நேரம், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸூம் போராடிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.