கிணற்றில் குளிக்க சென்ற மாணவன் தண்ணீரில் முழ்கி உயிரிழப்பு..!

Tamil nadu
By Thahir May 07, 2022 05:54 PM GMT
Report

வாலாஜாபாத் அடுத்த அங்கம் பாக்கம் கிராமத்தில் ப்ளஸ் டூ மாணவன் கிணற்று சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சக்திவேல் (17).அவளுர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டு வருகின்றான்.

நேற்று அரசு +2 பொது தேர்வு துவங்கிய நிலையில், இன்று விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர்.

ஓராண்டு காலமாக விவசாயம் இல்லாத கிணறு என்பதால் சேற்று சகதியாக உள்ளதை அறியாத மாணவர்கள் நீரில் குதித்த போது சக்திவேல் சேற்றில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் மூச்சு திணறி உள்ளேயே சிக்கிக் கொண்டான்.

சக்திவேலை காணாமல் போனதால் உடன் வந்த நண்பர்கள் கிராமத்திற்கு சென்று பெரியவர்களை அழைத்து வந்தும் , காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை சிறப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான குழுவினர் கிணற்றில் சிக்கி இருந்த சக்திவேலை மீட்டு மாகரல் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

மாகரல் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு உடலை உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிளஸ் டூ பள்ளி மாணவன் தேர்வு எழுதி வரும் நிலையில் மரணம் அடைந்தது அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.