பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் தொடர் - வெளியானது முக்கிய அறிவிப்பு
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் இந்தாண்டாவது ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள 8 அணிகளோடு புதிதாக அகமதாபாத், லக்னோ என இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், வீரர்களுக்கான மிகப்பெரிய ஏலமும் ஐபிஎல் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அணி உரிமையாளர்கள் மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பின் பேசிய ஜெய் ஷா 15வது ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் கடைசியில் தொடங்கி மே மாதம் இறுதி வரை நடைபெறும் என்பதை உறுதிப்படுத்துவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அணி உரிமையாளர்கள் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இந்தியாவில் ஐபிஎல் தொடரை உறுதிசெய்ய கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நாங்கள் விட்டுக்கொடுக்க விரும்ப மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இந்தியாவில் போட்டிகள் நடைபெறுவதை உறுதிப்படுத்தினாலும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிசிசிஐ பிளான் பி ஒன்றையும் தயார் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.