நடு வானம்..நெஞ்சு வலியால் இறந்த விமானி; அலறிய 271 பயணிகள் - அடுத்து என்ன நடந்தது ?
நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போதே விமானி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானி இறப்பு
கடந்த ஞாயிற்றுக் கிழமை அமெரிக்காவின் மியாமியிலிருந்து தென் ஆப்பிரிக்காவின் சிலிக்கு 271 பயணிகளுடன் LATAM ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு 3 மணி நேரத்திற்கு பிறகு விமானத்தை இயக்கிய 25 வருட அனுபவமுள்ள இவான் ஆண்டூர் (56) என்ற மூத்த விமானிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
கழிவறைக்கு சென்ற விமானி அப்படியே அங்கு சரிந்து விழுந்துள்ளார். அங்கிருந்த விமான குழு அவருக்கு முதற்கட்ட மருத்துவ உதவிகளை அளித்துள்ளனர். இருந்தும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த இணை விமானி துரிதமாக செயல்பட்டு விமானத்தை அவசரமாக பனாமாவில் தரையிறக்கினார். விமானம் தரையிறங்கிய பின்னர் அவரை பரிசோதனை செய்த மருத்துவக் குழு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
விமான நிறுவனம் அறிக்கை
இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ' நேற்று 3 பைலட்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், விமானம் உடனடியாக பனாமாவில் உள்ள டாகுமென் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானியை காப்பாற்ற முயற்சிகள் எடுத்தபோதும் விமானம் தரையிறங்கும்போதே அவர் இறந்து விட்டார். இவான் ஆண்டரின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது நீண்ட சேவையையும், அர்ப்பணிப்பையும் நாங்கள் நினைவு கூர்கிறோம். அவரது இறப்புக்கு எங்கள் வருத்தங்களை தெரிவிக்கிறோம்' என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.