“போதும்பா உங்க அரசியல்” - ஓய்வு பெறும் பிரபல நாட்டின் அதிபர்

Rodrigo Duterte philippinepresident
By Petchi Avudaiappan Oct 02, 2021 11:17 PM GMT
Report

அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபா் ரோட்ரிகோ டுடோதே அறிவித்துள்ளாா்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்தாண்டு அதிபர்,துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தற்போதைய அதிபர் ரோட்ரிகோ டுடோதே, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தேர்தலில், துணை அதிபா் பதவிக்கு நான் போட்டியிடுவதை பொதுமக்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

இதுதொடா்பான கருத்துக் கணிப்புகள், சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகள் மூலம் துணை அதிபராகும் தகுதி எனக்கில்லை என்பது தெரிய வருகிறது.அவ்வாறு தேர்தலில் நான் போட்டியிடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் பெரும்பாலானவா்கள் கருதுகின்றனா் என்று ரோட்ரிகோ கூறியுள்ளார்.

எனவே, பொதுமக்களின் விருப்பத்திணங்க நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று அவர் அறிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒருவா் ஒரு முறை மட்டுமே 6 ஆண்டுகளுக்கு அதிபா் பதவியை வகிக்க முடியும்.

இந்த நிலையில், ரோட்ரிகோ டுடோதே மீண்டும் துணை அதிபா் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.