உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் கவலை!
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை 100 ஐ கடந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு வந்தது.
அதிகரிக்கும் விலையால் பிற பொருள்களின் விலைவாசியும் உயரும் சூழல் உருவானது. இந்நிலையில் சென்னையில், பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.99.80ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 26 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.93.72 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
மேலும் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.