பெட்ரோல்-டீசல் விலை உயர்கிறது- லிட்டருக்கு ரூ.6 வரை அதிகரிக்க வாய்ப்பு
இந்தியாவில் இன்று முதல் பெட்ரோல்-டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல்- டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. அதன்படி பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.100ஐ கடந்த பெட்ரோல், டீசல் விலை,அதன் மீதான வரிகள் குறைக்கப்பட்டதால் அதன் விலை சற்று குறைந்தது. இந்த நிலையில் 5 மாநில தேர்தல் காரணமாக 127வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்தது.
ஆனால் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டு மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது.
தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 139 டாலராக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 35 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. எனவே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்றும், 5 மாநில தேர்தலுக்கு பிறகு இந்த விலை உயர்வு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விலையை உயர்த்துவது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை நடத்தின. இதில் பெட்ரோல்,டீசல் விலையை ரூ.5 முதல் ரூ.6 வரை உயர்த்தலாம் என்று முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.