ரூ.110 எட்டிய பெட்ரோல் விலை கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!

Price Petrol Diesel Hike Continuously
By Thahir Apr 05, 2022 01:56 AM GMT
Report

கடந்த 15நாட்களில் பெட்ரோல்,டீசல் விலை 13வது முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப,எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

இதற்கிடையில், கடந்த 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் கடந்த மார்ச் 22 ஆம் தேதி அதிகரித்தது.

அதன்படி, கடந்த 22-ஆம் தேதி ஒருலிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்கப்பட்டது.

இதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் தவிர்த்து ஏனைய அனைத்து நாட்களும் எரிபொருள் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.9 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலையும் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.100.18காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.