கர்ணன் திரைப்படம் வெளியான சினிமா தியேட்டரில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
தூத்துக்குடியில் கர்ணன் திரைப்படம் வெளியான சினிமா தியேட்டரில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி போல்டன்புரத்தில் ஒரு சினிமா தியேட்டரில், தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. நேற்று இரவு காட்சிக்கு படம் பார்க்க வந்தவர்களில் 5 பேர் குடிபோதையில் தியேட்டருக்கு வந்துள்ளனர். அப்போது, தியேட்டர் நிர்வாகத்தினர், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து, டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கொடுத்து அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, தியேட்டருக்குள் அனுமதிக்காததால், ஆத்திரத்தில் மீண்டும் தியேட்டருக்கு வந்த அவர்கள், இரவு 11 மணியளவில் தியேட்டர் வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் 5 குவார்ட்டர் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி வீசியதில் அது தரையில் விழுந்து வெடித்துள்ளது. ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை டவுண் டி.எஸ்.பி. கணேஷ் பார்வையிட்டார்.
இது தொடர்பாக தியேட்டரில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.