பிரியாணி கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களால் பரபரப்பு
ஒசியில் பிரியாணி தரவில்லை எனக்கூறி பிரியாணி கடை மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியை சேர்ந்தவர் அருணாசலம்(40). இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பிரியாணி கேட்டபோது அருணாச்சலம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிறிது நேரத்தில் பிரியாணி கடைக்கு முன் 2 பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து துாக்கி எறிந்துள்ளனர்.
மேலும் அருகிலிருந்த வீட்டின் மீதும் ஒரு பெட்ரோல் பாட்டிலை வீசி எறிந்துள்ளனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்து அருணாச்சலம் கொடுத்த புகாரின் பேரில் திருமழிசை பகுதியைச் சேர்ந்த எபிநேசன் (34) மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 மீது வெள்ளவேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எபிநேசன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் வெள்ளவேடு காவல் துறையினர் தெரிவித்தனர்.