இதனால்தான் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசினேன் - கைதானவர் கூறிய அதிர்ச்சி தகவல்
சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ரவுடி கர்த்தா வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் தியாகராயநகர் பகுதியில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியோடி விட்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த தியாகராயநகர் துணை ஆணையர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். 3 மது பாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அந்த வீடியோ காட்சியை வைத்து நந்தனத்தை சேர்ந்த ரவுடி கர்த்தா வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நீட் தேர்வுக்கு பாஜக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.