“இப்படியும் ஒரு பிரதமர்” - பதவி ஏற்ற ஒரே வாரத்தில் ராஜினாமா
பெரு நாட்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்கான நாடுகளில் ஒன்றான பெருவின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி பதவி ஏற்றார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவி மற்றும் மகள் 2016 இல் புகார் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இதனை திட்டவட்டமாக பின்டோ மறுத்தார். இதனிடையே நாட்டின் அமைச்சரவையை மாற்றி அமைக்க உள்ளதாக பெரு நாட்டு அதிபர் பெட்ரோ காஸ்டிலோ சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இதனையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் ஹெக்டர் வலர் பின்டோ கூறியுள்ளார். மேலும் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் பெட்ரோ காஸ்டிலோவிடம் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதேசமயம் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.மேலும் தனக்கு எதிராக குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள் மீது அவர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.