பெர்சியன் ரக பூனையை திருடி சென்ற மர்மநபர்கள்
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தால் பிரபலமான பெர்சியன் ரக பூனை ஒன்றை புதுச்சேரியில் மர்ம நபர்கள் மூன்று பேர் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகில் வண்ண மீன்கள் விற்கும் கடை நடத்தி வருபவர் ஜெயக்குமார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக பெர்சியன் ரக பூனையை வளர்த்து வருகிறார்.
கடையில் சுதந்திரமாக இந்த பூனை உலாவி வரும். விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு இந்த பூனை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கடந்த 18-ந் தேதி இரவு ஜெயக்குமாரின் கடைக்கு வந்த 3 பேர் அங்கு வளர்க்கப்படும் புறா, வண்ண மீன்கள் பற்றி விவரங்களை கேட்டதுடன் பூனையுடன் விளையாடினர்.
பின்னர் 2 பேர் மட்டும் வெளியேறி மோட்டார் சைக்கிளுடன் தயாராக நின்றுகொண்டனர்.
மற்றொருவர் உரிமையாளரிடம் விசிட்டிங் கார்டு கேட்பது போல் அவரது கவனத்தை திசை திருப்பி கடையில் இருந்த பெர்சியன் ரக பூனையை திருடிக் கொண்டு சென்று விட்டார்.
இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தன.
இதனையடுத்து பூனை திருடப்பட்டதை அறிந்த ஜெயக்குமார், திருடப்பட்ட பூனையை மீட்டு தருமாறு முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனிடையே சிசிடிவி காட்சிகள் இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் வைரலானதை அடுத்து, அதனை திருடி சென்றவர்கள் பூனையை மீண்டும் கடைக்கு அருகே விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்.