பெரியாரின் தீவிர தொண்டன் வே.ஆனைமுத்து உயிரிழந்தார்
பெரியாரின் பெரிய தொண்டரான வே.ஆனைமுத்து புதுச்சேரியில் இன்று காலமானார். பெரம்பலூர் அருகே முருக்கன்குடி என்ற கிராமத்தில் 1925ம் ஆண்டு வேம்பாயி - பச்சையம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் ஆனைமுத்து. இவர் தனது 19ம் வயதிலே பெரியாரின் சொற்பொழிவைக் கேட்டு அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
அன்று முதல் பெரியாரின் கொள்கைகளை பரப்புவதே அவரின் வேலையாக இருந்தது. 1950-ம் ஆண்டில் "குறள் மலர்" என்ற பத்திரிகையைத் ஆனைமுத்து தொடங்கினார். அதனையடுத்து, "குறள் முரசு", "சிந்தனையாளன்" ஆகிய பத்திரிகைகளை ஆரம்பித்தார். இதில் "சிந்தனையாளன்" பத்திரிகையை இன்று வரை நடத்தி வந்தார்.
மேலும், 1957ம் ஆண்டில் அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு 18 மாதங்கள் வேலுர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியாரின் சிந்தனைகள் குறித்து பல்வேறு நூல்களையும் ஆனைமுத்து எழுதியிருக்கிறார். மேலும், மார்க்சிய பெரியாரின் பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.
தனது 96 வயதில் இன்று புதுச்சேரியில் காலமானார். அவருக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.