பெரியார் பிறந்த நாள், சமூக நீதி நாள் - முதல்வர் அதிரடி அறிவிப்பு
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி, இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் செயல்கள் குறித்து பேச வேண்டுமென்றால் 10 நாட்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும்.
செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும். யாரும் எழுத தயங்கியதை எழுதியவர்; யாரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார்.
இதனால் பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். தமிழருக்கு எதிரான எல்லாவற்றையும் எதிரியாக கொண்டு செயல்பட்டார் பெரியார்.
நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாத பெரியாரால்தான் இந்திய அரசியல் அமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய எழுச்சிக்கு பெரியார் போட்ட விதைதான் காரணம். தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் அடையாளமாக சமூக நீதி நாளை கொண்டாடுவோம்” என தெரிவித்தார்.