நாளை முதல் முழு ஊரடங்கை முன்னிட்டு மீன்,காய்கறி மார்க்கெட்டுகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

danger corona spread peoples crowd
By Praveen May 09, 2021 10:24 AM GMT
Report

 நாளை முழு நேர ஊரடங்கு எதிரொலி மீன்கடைகள், காய்கறி கடைகளில் பொதுமக்கள் குவிந்துள்ளதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவின் அசுர பரவல் காரணமாக திங்கட்கிழமை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொது மக்கள் அதிகாலை முதலே அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் ஊரடங்கு நேரத்தில் கடைகள் திறக்கப்படாமல் போய்விடுமோ உணவுக்கு என்ன செய்வது என்று அறிந்த மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் காய்கறி மீன்கள் மற்ற மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக காசிமேடு, திருவொற்றியூர் காலடிபேட்டை மற்றும் தேரடி சந்தை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கொரோனா அச்சமின்றியும் சமூக இடைவெளியின்றியும் பொருட்களை வாங்கி செல்ல அலைமோதினர்.

வியாபாரிகளும் காவல்துறையின் சார்பில் சமூக இடைவெளியை கடைபிடிக்க கூறி பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தாலும் அதனை பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை.

நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், இது போன்ற பொது மக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதால் நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இவற்றை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.