பைக்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்ற நபர்கள் - மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு!
அனைவரும் எதிர்பார்த்த தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்தது. இந்நிலையில், வேளச்சேரி அருகே வாக்குப்பதிவு இயந்திரம் பைக்கில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சென்னை தரமணியில் பைக்கில் சென்ற 3 பேர், 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இதைக் கண்ட பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் 3 பேரும் மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது. வாக்கு இயந்திரங்கள் அவர் கொண்டு சென்றதால் அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டுமென திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், அவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடையாது என்று கூறினார். ஆனால், அதை ஏற்காத அரசியல் கட்சிகள் இச்சம்பவத்துக்கு கண்டனக் குரலை எழுப்பி வருகிறது.

இதனையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி அறிக்கை ஒன்றை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷுக்கு அனுப்பி வைத்தார். அதில், வேளச்சேரியில் பைக்கில் எடுத்துச் சென்றது தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்கு இயந்திரங்கள் கிடையாது என்று அதில் குறிப்பிட்டிருந்தார். பழுதான 2 விவிபேட் இயந்திரங்களும், 2 மாற்று இயந்திரங்களும் பைக்கில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் இயந்திரங்களை கவனக்குறைவாக எடுத்துச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.