உதகையில் சுற்றித் திரியும் செந்நாய்களால் வேட்டையாடப்படும் மான்கள்: மக்கள் அச்சம்
உதகை அருகே மார்லிமந்து வன பகுதிக்கு வந்துள்ள 35 க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கூட்டம் கடந்த 10 நாட்களில் 25-க்கும் மேற்பட்ட கடமான்களை வேட்டையாடிய சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேட்டையாடபட்ட கடமான்களின் எலும்பு கூடுகள் அணையின் கரையோரத்தில் குவிந்து கிடக்கின்றன. உதகை அருகே உள்ள மார்லிமந்து அணை பகுதியை சுற்றி அதிக வனபகுதி உள்ளது.
அதில் புலி, சிறுத்தை, காட்டுபன்றி, கடமான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மார்லிமந்து அணையில் உள்ள தண்ணீர் உதகை நகரின் குடிநீராக வினியோகம் செய்யபட்டு வருகிறது.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக வன பகுதியில் வாழக்கூடிய அரிய வகை செந்நாய்கள் முதல் முறையாக மார்லிமந்து வனபகுதிக்கு இடம் பெயர்ந்து வந்துள்ளன. சுமார் 35 செந்நாய்கள் கொண்ட அந்த கூட்டம் அப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு கடமான்களை வேட்டையாடி வருகிறது.
குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் 25 கடமான்களை வேட்டியாடி உள்ளன. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அணையின் கரையோரத்திற்கு வரும் செந்நாய்கள் தண்ணீர் குடிக்க அணைக்கு வரும் கடமான்களை அடித்து கொன்று சாப்பிட்டு வருகின்றன.
இதனால் அணையின் கரை ஓரத்தில் ஏராளமான எலும்பு கூடுகள் குவிந்து கிடக்கின்றன. செந்நாய்கள் கூட்டம் கடமான்களை வேட்டையாடுவதை கண்டு மார்லி மந்து பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதே நிலை தொடர்ந்தால் செந்நாய்கள் கிராம மக்கள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாட வாய்ப்பு உள்ளதால் வனத்துறையினர் அந்த செந்நாய்களை கண்காணிக்க வேண்டும் என்றும் வேட்டையாடிய மான்களின் உடல்கள் தண்ணீருக்குள் கிடப்பதால் தண்ணீர் மாசடைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.