தைவான் சென்றார் நான்சி பெலோசி : பரபரப்பில் உலக நாடுகள்..!
இரண்டாம் உலக போருக்கு பிறகு சீனாவில் இருந்து தைவான் பிரிந்தது. தற்போது தைவான் தனி நாடாக உள்ளது , ஆனால் சீனாவோதைவானை தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்று சொல்லிக்கொண்டிருக்கிறது.
சீனா அமெரிக்கா பகை
அது மட்டுமல்ல, தைவானை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் சீன அதிபர் ஜின்பிங் தீராத ஆசை கொண்டுள்ளார்.
இதற்கு காரணம், உலக அரங்கில் அமெரிக்கா தன்னை முன்னணியில் நிறுத்திக்கொண்டதுபோல ஆசியாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீனா கருதுவதுதான். ஆனால் தைவானுக்கு தொடர்ந்து ஆதரவினை கொடுத்து வருகிறது .

அமெரிக்கா டிரம்ப் அதிபராக இருக்கும் போதே தைவான் பிரச்சினை பெரிதானது இது அமெரிக்கா மற்றும் சீனா இடையே இருந்து வந்த பனிப்போரினை அதிகமாக்கியது.
இந்த நிலையில் , அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி , தனது ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தில் தைவானுக்கு வர சுற்றுபயணமாக வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சீனா எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியது.
நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால், அமெரிக்கா அதற்கான விலையைக் கொடுக்கும் என்று சீனா எச்சரித்தது. இதுபற்றி சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் குவா சுன்யிங் கூறும்போது.
சீனாவின் இறையாண்மை பாதுகாப்பு நலன்களை பலவீனப்படுத்தினால், அதற்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்க வேண்டும், அதற்கான விலையையும் கொடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது.
பரபரப்பில் உலக நாடுகள்
இந்த நிலையில் சீனாவின் எதிர்ப்பினை ஒரம் கட்டிய அமெரிக்கா பெலோசியினை தைவானுக்கு அனுப்பி வைக்க உறுதி செய்தது. இது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா ஏற்கனவே பங்காளி சண்டை இருந்து வரும் நிலையில் பெலோசியின் பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தடைவிதித்த சீனா
நான்சி பெலோசி நேற்று மலேசியா சென்றார். அந்த நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து அவரது விமானம் (சி-40பி) தைவான் புறப்பட்டது. நான்சி பெலோசியின் விமானம் தைவான் வான்பரப்புக்குள் சென்றதும் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அவரது விமானத்துக்கு தைவான் போர் விமானங்கள் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வானில் வலம் வந்தன. மற்றொரு புறம் சீனாவின் 4 போர் விமானங்கள் தைவான் வான் வெளியில் நுழைந்துள்ளன.
US House Speaker #NancyPelosi meets President of #Taiwan Tsai Ing-wen in Taipei #PelosiTaiwanVisit pic.twitter.com/ld8nzFnDXg
— The Times Of India (@timesofindia) August 3, 2022
இத்தனை பரபரப்பு, பதற்றத்துக்கு மத்தியில் நான்சி பெலோசியின் விமானம் தைவான் தலைநகரான தைபேயில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.42 மணிக்கு (இந்திய நேரம் நேற்று இரவு 8.12 மணி) தரை இறங்கியது.
இதனால் அடுத்தது என்ன என்ற பரபரப்பு உலக அரங்கில் நிலவுகிறது. இதனை தொடர்ந்து, தைவானின் பல்வேறு நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகள் மற்றும் இறக்குமதி தடைகளை சீனா விதித்து உள்ளது.தைவானின் பல்வேறு உணவு நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் இறக்குமதிக்கு சீனா தற்காலிக தடை விதித்து உள்ளது.

இதனை தைவான் வேளாண் கவுன்சில் உறுதிப்படுத்தி உள்ளது. இதன்படி, தேயிலை பொருட்கள், உலர் பழங்கள், தேன், கோக்கோ பீன்ஸ் மற்றும் காய்கறிகள் உள்பட 700 மீன்பிடி படகுகளில் கொண்டுவரப்பட்ட மீன்களையும் கருப்பு பட்டியலில் சீனா சேர்த்து உள்ளது.
இதுபற்றிய சீனாவின் சுங்க இலாகாவின் பொது நிர்வாகத்திற்கான வலைத்தள தகவலின்படி, பல தைவான் நிறுவனங்கள் தங்களது பதிவை புதுப்பித்துள்ளபோதிலும், இந்த தடையால் பாதிக்கப்பட்டு உள்ளன என தெரியவந்துள்ளது.
இதன்படி, பதிவு செய்யப்பட்ட 107 தைவான் நிறுவன பிராண்டுகள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. இதன்கீழ், ரொட்டிகள், நூடுல்ஸ் உள்ளிட்டவை வரும். இதேபோன்று, 35 நிறுவனங்கள், தற்போது இறக்குமதிக்கான தற்காலிக சஸ்பெண்டு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.