தமிழ்நாட்டைப் பிரித்தால் போராட்டம் வெடிக்கும் - பழ. நெடுமாறன் எச்சரிக்கை

Pazha nedumaran Kongu naadu
By Petchi Avudaiappan Jul 12, 2021 05:52 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அரசியல்
Report

தமிழ்நாட்டைப் பிரித்து கொங்கு தனி மாநிலம் உருவாக்கினால் கடும் போராட்டம் வெடிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களைப் பிரித்து கொங்கு நாடு என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்குவது பற்றி இந்திய அரசு ஆராய்ந்து வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது.இம்முயற்சி உண்மையாக இருக்குமானால், அதை எதிர்த்துத் தமிழர்கள் மிகக் கடுமையாகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டை வடக்கு, தெற்கு என பிரித்து இரு மாநிலங்களாக்கும் கோரிக்கையை சிலர் எழுப்பினர். அப்போதும் தமிழர்களின் கடும் எதிர்ப்பின் விளைவாக அத்தகைய கோரிக்கை கைவிடப்பட்டது. சங்க காலத்திலிருந்து 1956ஆம் ஆண்டு மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட காலம் வரை தமிழ்நாடு என்றும் ஒரே நாடாக இருந்ததில்லை. மூவேந்தர்களும், வேறு பல மன்னர் குலத்தினரும் பிரித்து ஆண்ட சிறுசிறு நாடுகளாகத்தான் திகழ்ந்தது. பிறகு, அந்நியர்களின் படையெடுப்புக்கு ஆளாகி அடிமைப்பட்டது.

தமிழ்நாட்டுத் தமிழர்களும், உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் பல்வேறு சிக்கல்களை சந்தித்துவரும் இவ்வேளையில், தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று போராடாவிட்டால், நம்மையும் காப்பாற்றிக்கொள்ள முடியாது, நம்மை நம்பியிருக்கிற உலகத் தமிழர்களையும் காக்க முடியாது. எனவே, தமிழ்நாட்டைப் பிரிக்கும் செயல் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடத் தயாராகுமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.