‛ஏ முத்தழகு...உன்னத்தான்’ - பருத்திவீரனில் தெனாவட்டாக சுற்றிவந்த ’குட்டிச்சாக்கு’ இப்போ என்ன நிலையில் இருக்காருன்னு தெரியுமா?
கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் வெளியான படம் பருத்திவீரன்.
கார்த்தி, ப்ரியாமணி, கஞ்சா கருப்பு, சரவணன் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பருத்திவீரன் படத்தில் ‛ஏ முத்தழகு...’ என வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வித்தியாசமான உச்சரிப்பால் தெனாவட்டாக சுற்றித் திறியும் அந்த குட்டி சிறுவனை யாரும் மறந்திருக்க முடியாது.
குட்டிச்சாக்கு என்ற கதாப்பத்திரத்தில் நடித்த அந்த சிறுவன் இப்போது பெரிய லோடு சாக்குகளை தூக்கிக் கொண்டிருக்கிறார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள அவர் பருத்திவீரன் படத்திற்கு முன்பு தனது வாழ்க்கை எப்படி இருந்தது, படம் அமைந்த பின் எப்படி சென்றது என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
‘7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, பள்ளியில் வைத்து என்னையும், ப்ரியாமணிக்கு சிறு வயது கதாப்பாத்திரத்தில் நடித்த பெண்ணையும் பார்க்க வந்தாங்க. நானும், அவங்களும் அங்கேயே தேர்வானோம். எழுதிக் கொடுத்ததை பேச சொன்னாங்க, ஒரு வருடம் பருத்திவீரன் படக்குழுவில் தான் இருந்தேன். பள்ளிக்கு போவது குறைந்துவிட்டது .
படப்பிடிப்பின் போது, எனக்கு எதுவும் தெரியவில்லை. சின்ன சின்னதா எடுப்பாங்க. அப்போ என்ன எடுக்குறாங்கன்னே தெரியாது. முழுசா முடிஞ்சு படம் வந்த பிறகு தான், பார்க்கும் போது சந்தோசமாக இருந்தது. 2008-ல் பருத்திவீரன் வந்த பிறகு, அதுக்கு அப்புறம் ஆடு, மாடு வளர்க்க ஆசை வந்துடுச்சு.
நான் ஆடு மேய்க்க போய்டுவேனோன்னு என் அப்பாக்கு பயம், என்னை திட்டினார். என்ன வேலை பார்த்தாலும், இதை விட்டுவிடக்கூடாது என நான் உறுதியாக இருந்தேன். பருத்துவீரன் படம் வருவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன், கண்ணில் குச்சி குத்திவிட்டது. அப்போது தான் எனது கண் பாதிக்கப்பட்டது.
அறியாத வயதில் நடிப்புக்கு வந்துவிட்டேன். அப்போது எனக்கு அதன் அருமை தெரியவில்லை.இப்போ, சினிமான்னா என்னென்னு தெரியுது. இப்போ எனக்கு நடிக்க ஆசையிருக்கு; ஆனால் வாய்ப்பு இல்லை. இப்போ எனக்கு மாடு வளர்க்குறது தான் ஒரே ஆசை. அது தான் வாழ்க்கைன்னு ஆயிடுச்சு. திருமணம் ஆகிவிட்டது.
மாட்டுக்கு இரை போடுவதற்காக தான் இந்த வேலைக்கே வருகிறேன். பழனிக்கு பாதயாத்திரை சென்ற போது, 15 பேர் என்னை வழிமறித்தார்கள். அவர்கள் என்னை அடையாளம் கண்டுவிட்டார்கள். அதன் பின் என்னுடன் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். அது தான் எனக்கு வாழ்நாளில் சந்தோஷமான தருணம்.
எனக்கு கிடைத்த ஒரே ஒரு அங்கீகாரம் அது மட்டும் தான். யாரிடம் போய் சினிமா வாய்ப்பு கேக்குறதுன்னு கூட தெரியல. அதுக்கு முயற்சியும் பண்ணல. 5 வருசமா லோடு மேனா போய்ட்டு இருக்கேன்’’ என தெரிவித்துள்ளார் குட்டிச்சாக்கு என்ற விமல்ராஜ்.