“எனக்கு திருப்தியே இல்லை” - தேசிய விருது பெற்ற பார்த்திபனின் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?

othaseruppu RParthiban nationalaward2019
By Petchi Avudaiappan Oct 26, 2021 10:14 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

ஒத்த செருப்பு படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஏன் வழங்கப்படவில்லை என நடிகர் பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியான படம் ஒத்த செருப்பு. இந்த படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெறும் வகையில் இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பார்த்திபனின் முயற்சியை வெகுவாகப் பாராட்டினர்.

ஒத்த செருப்பு படம் இந்தியில் அபிஷேக்பச்சன் நடிக்க ரீமேக் செய்யப்பட உள்ளது. இதனிடையே இந்தப்படத்திற்கு சிறந்த சவுண்ட் எஃபெக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

விருது பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் பார்த்திபன், உண்மையை சொல்வதென்றால் இந்த படத்திற்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆஸ்கர் விருது பட்டியலில் ஒரே படத்துக்கு வெவ்வேறு பிரிவுகளில் நிறைய விருதுகள் கொடுப்பார்கள், அதுபோல் இந்த படத்திற்கும் சிறந்த நடிகர் விருது உள்பட இன்னும் சில விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். 

எனக்கு என்னுடைய படத்தை பற்றி நன்றாக தெரியும். இன்னும் சில விருதுகளை பெற தகுதியான திரைப்படம் ’ஒத்த செருப்பு’. இந்தப்படம் என்னுடைய தனித்துவமான படம். அவ்வாறு இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஏன் நடிப்புக்கு எனக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.

இருப்பினும் அடுத்த படத்தில் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்க முழு முயற்சி செய்வேன். எனது அடுத்த படம் 'இரவின் நிழல்’ என்ற சிங்கிள் ஷாட் படம், உலகில் இதுவரை யாரும் செய்யாத முயற்சி தான் இந்த படம் என அவர் தெரிவித்துள்ளார்.