சாதி குறித்த பேச்சு: வருத்தம் தெரிவித்த நடிகர் பார்த்திபன்
சாதி குறித்து மேடையில் பேசியது சர்ச்சையான நிலையில் அதற்கு நடிகர் பார்த்திபன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பார்த்திபன் நடிப்பில் அடுத்து தெலுங்கில் வெளியாக உள்ள திரைப்படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்துள்ளதாக தெரிகிறது.
இந்தப் படம் வரும் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் தனது சாதியை வெளிப்படையாக கூறி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக மேடையில் பேசிய பார்த்திபன், “என்னுடைய முழுப் பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன். நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது.
அதனால் இயற்கையாகவே தமிழ் சரளமாக வரும். தெலுங்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியாது. ஆனால், இந்தப் படத்தின் வெற்றி விழாவுக்கு வந்து உங்களை சந்திப்பேன். அப்போது நான் உங்களிடம் வந்து சரளமாக தெலுங்கு பேசுவேன் என்பதை இந்த மூர்த்தி உங்களுக்கு வாக்களிக்கிறான். மூர்த்தி என்பது என்னுடைய ஒரிஜினல் பெயர்.” என்றார்.
சாதி குறித்து பார்த்திபன் பேசியது சர்ச்சையானது. பலரும் பார்த்திபனுக்கு கண்டனங்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே சர்ச்சைக்கு விளக்கம் அளித்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன், "சத்தியமாக சொல்கிறேன். எந்த உள்நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.
அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்?. ஏதோ வாய்த்தவறி…. இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது.
அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது. ‘இவன்’ உட்பட பல படங்களில் பல இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன்.
அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா?. தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை.

என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன்.
என் பேச்சால் வேதனைப்பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக மன்னிப்பைத் தெரிவிக்கிறேன்.
தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன்.
இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.