நுரையீரலில் பேனா மூடியுடன் அவதிப்பட்ட இளைஞர் - கடைசியில் நடந்த அதிசயம்
கேரளாவில் 18 ஆண்டுகளாக நுரையீரலில் பேனா மூடியுடன் அவதிப்பட்டு வந்த இளைஞருக்கு மருத்துவர்கள் வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சி ஆலுவா பகுதியில் வசித்து வருபவர் சூரஜ் என்ற 32 வயது இளைஞர் அடிக்கடி மூச்சுத்திணறல்,இருமல், சளிப்பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதனிடையே சமீபத்தில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சூரஜ்ஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்ததில் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் சூரஜின் நுரையீரல் பகுதியில் ஏதோ ஒரு சிறிய பொருள் சிக்கி கொண்டு இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் சிறப்பு பிரிவு டாக்டர்கள் மற்றும் இதயநோய் வல்லுனர்கள் குழு அறுவை சிகிச்சை செய்தபோது அதில் சூரஜின் நுரையீரலில் ஒரு பேனா மூடி இருந்துள்ளது.
சூரஜ் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது அடிக்கடி பேனா மூடியை வைத்து விசில் அடிப்பது வழக்கம். ஒருமுறை விசில் அடித்து கொண்டிருந்த போது பேனா மூடியை தவறுதலாக விழுங்கியுள்ளார்.
உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை பெற்றோர் அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர்.
ஆனால் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என மருத்துவர்கள் கூற அப்படியே விட்டுள்ளனர். அதுவே 18 ஆண்டுகாலமாக சூரஜின் மூச்சுப்பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளது.