ஜி.எஸ்.டி. உயர்வு - 2வது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்டு மாதம் 12ந் தேதி வரை நடைபெற உள்ளது.
அரிசி, கோதுமை, தயிர் விலை உயர்வு
இந்நிலையில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், 25 கிலோ அரிசி மூட்டை 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
2-வது நாளாக அவை ஒத்திவைப்பு
நேற்று நடந்த நடப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்ற மேலவையில் பணவீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விகித உயர்வு பற்றி அவையின் மைய பகுதிக்கு சென்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டார்கள். அவர்கள் அனைவரையும் அமரும்படி அவை தலைவர் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நேற்று அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றும் நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.