புதுச்சேரியில் பள்ளியை மூட சொன்ன பாஜகவினரை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
புதுச்சேரியில் பள்ளியை மூட சொன்ன பாஜகவினரை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக பேருந்துகள் மீது தாக்குதல்
திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் புதுச்சேரியில் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக புதுச்சேரியில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் இயங்காமல் உள்ளது.
இதையடுத்து புதுச்சேரியின் முக்கிய பகுதியில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்புடன் மிக குறைந்த எண்ணிக்கையில் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.
வில்லியனுார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தமிழக அரசு பேருந்துகள் மீது கல் வீசப்பட்டு தாக்கப்பட்டது.
பாஜகவினரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
இதனால் பேருந்தின் முகப்பு கண்ணாடிகள் முழுவதும் உடைந்து சேதமடைந்தது. மேலும் உப்பளத்தில் உள்ள தனியார் பள்ளியில் நுழைந்த பாஜகவினர் சிலர் பள்ளியை விடுமுறை அளிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
பள்ளியில் காலாண்டு தேர்வு நடைபெறுவதால் விடுமுறை அளிக்க முடியாது என பள்ளியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாஜகவினர் அங்கிருந்து செல்லாமல் பள்ளியை மூட சொன்னதால் குழந்தைகளை பள்ளிக்கு விட வந்த பெற்றோர் பாஜகவினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த முதலியார் பேட்டை போலீசார் பாஜகவினரை பள்ளியில் இருந்து வெளியேற்றினர்.