உக்ரைன் நாட்டில் உணவில்லாமல் சிக்கித்தவிக்கும் மகனை மீட்டு தாருங்கள் - பெற்றோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
உக்ரைன் நாட்டில் பல்கலைக்கழகத்தின் குகை அறையில் சாப்பாடு இல்லாமல் சிக்கித் தவிக்கும் தனது மகனை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதால் பரபரப்பு.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இருநாடுகளும் சுமுகமாகப் பேசித் தீர்க்க வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
பொறியியல், மருத்துவம், தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு படித்து வருவதாகவும்,
அவர்களை மீட்க இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக தென் இந்தியாவில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேர் உக்ரைனில் கல்வி பயின்று வருவதாகவும், தற்பொழுது போர் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால்
அசாதாரண சூழ்நிலையை உணர்ந்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அங்கு பயிலும் மாணவர்கள் காணொலி வாயிலாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தங்களது குழந்தைகளை மீட்டுத்தரக்கோரி மனு அளித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியைச் சார்ந்த அண்டனி- கேப்ரியல் கார்த்திகாயனி தம்பதியரின் மகள் ஸ்ரீநிதி, குளித்தலை தாலுகா திம்மாச்சிபுரம் பகுதியில் வசிக்கும் சின்னத்துரை - சுதா தம்பதியரின் மகன் சூர்யா,
காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் தரன் ஆகியோரின் பெற்றோரும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.