திமுகவுடன் கூட்டணி; இதெல்லாம் நாகரிகமற்ற செயல் - உண்மை உடைத்த ஓபிஎஸ்!
ஸ்டாலின் உடனான சந்திப்பை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுகவுடன் கூட்டணி?
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வர் தொடர்ந்து 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததால், திமுகவுடன் கூட்டணியில் இணையப்போவதாக அரசியல் களமே பரபரப்பாகியது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஓபிஎஸ், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு.
இந்த வகையில், முதலமைச்சர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு பூரண குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன். இதேபோன்று அவரது மூத்த சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்து இரங்கல் தெரிவித்தேன்.
ஓபிஎஸ் விளக்கம்
இந்தச் சந்திப்பு தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. என்னுடைய மனைவியும், என்னுடைய தாயாரும் இறந்தபோது, என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், இந்தச் சந்திப்பை வைத்து என்னை தி.மு.க.வின் 'B' Team என்றும், நான் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், தி.மு.க.வில் இணையப் போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும் இதுகுறித்த செய்திகளை கற்பனையாக வெளியிட்டு வருகின்றன. இதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் பயணிப்பவன்.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் போவை பொதுத் தேர்தலில்அம்மா அவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதுதான் எங்களின் நோக்கம் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.